கவிழ்ந்த விமர்சகர்கள், வியந்த நடுநிலையாளர்கள், கலங்கிய ரசிகர்கள்!!
Monday, November 8, 2010 at 1:54 pm | 2,790 views
சும்மா வந்துவிடவில்லை எந்திரன் வெற்றி!
கடந்த அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து எந்திரன் பெரும் வெற்றி பெற்ற செய்தி வெளியாக வெளியாக, அது குறித்த விமர்சனங்களும் குறைவின்றி குவிந்து கொண்டே இருந்தன.
இந்த வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை மற்றும் இணைய தளங்களிலும் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்த்து, ரசிகர்கள் அல்லாத, நடுநிலையாளர்களே கூட, ‘இது டூ டூ மச்’ கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் படத்தை ஷங்கர் பிரமாதமாய் செதுக்கியிருந்தாலும், சன் பிக்சர்ஸ் சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்திருந்தாலும், இந்த பிரமாண்ட வெற்றியின் மூலகர்த்தா, சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பது ஷங்கர் – சன் இருவருக்குமே நன்கு தெரியும்!
அந்த மூலகர்த்தா, எந்திரனுக்காக பட்ட பாடுகள், ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ என்ற பெயரில் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பான போது விமர்சகர்கள் தலை கவிழ்ந்தன, நடு நிலையாளர்கள் வியந்தனர், ரசிகர்களோ கண் கலங்கினர்!
நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த என் தாயார் இப்படிச் சொன்னார்: “இந்த மனுசனுக்கு என்ன குறை… இப்படியெல்லாம் கஷ்டப்பட வேணாம்னு சொல்லுப்பா…!”
ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, தமிழ்க் குடும்பங்களில் ஒரு Household name ஆகவே ரஜினி மாறிப்போயிருப்பதன் பிரதிபலிப்பு இது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அத்தனை ரசிகர்களுமே அன்று அந்தத் தாயின் மனநிலையில்தான் தவித்திருப்பார்கள்!
ரஜினி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த மட்டுமல்ல.. தன்னையே திருப்திப்படுத்திக் கொள்ள இந்த அளவு இறங்கி வந்து, இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டாரோ, என்று கேட்க வைத்தது அவர் மேற்கொண்ட முயற்சிகள். சும்மா வரும் வெற்றி நிலைக்காது என்பார் தலைவர் அடிக்கடி. அப்படிச் சொன்னது பிறருக்கு மட்டுமல்ல, தனக்கும் சேர்த்தே என்பதைப் புரியவைத்துவிட்டார்.
அவர் இருக்கும் நிலைக்கு, ‘இதையெல்லாம் செய்ய முடியாது. டூப் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு சின்ன தலையசைப்பிலேயே உணர்த்திவிட்டுப் போயிருக்க முடியும்.
ஆனால், எதிலும் ஒரு ஒரிஜினாலிட்டி வேண்டும், கஷ்டப்பட்டு பெறும் வெற்றிதான் நிலைக்கும், இனிக்கும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதத்தில், ரஜினி உழைத்த உழைப்பு, அனைவருக்கும் ஒரு பாடம்! இந்த உண்மையான மனிதருக்கு, உத்தம கலைஞனுக்கு ரசிகனாக இருப்பதை எண்ணி நிஜமாகவே ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள்!
உண்மை மகத்தானது… அசாதாரண வலிமை வாய்ந்தது. பொய்யர்களையும் புனை சுருட்டுக்காரர்களையும் ரொம்ப சாதாரணமாக ஊமையாக்கிவிடும் சக்திமிக்கது!
நண்பர்கள் பலர் ஒரு யு ட்யூப் லிங்க்கை அனுப்பி, இதில் ரஜினி போல மாஸ்க் அணிந்துள்ள ஸ்டன்ட் கலைஞர் யார்? என்ன?வென்று பலமுறை நம்மிடம் கேட்டிருந்தனர். இயக்குநர் ஷங்கரிடமே அதற்கான பதிலைப் பெற்று பதிவு செய்திருந்தோம். இதோ, இப்போது மேக்கிங் ஆஃப் எந்திரன் மூலம், அந்த ரயில் சண்டைக் காட்சியில் எந்த அளவு ரிஸ்க் எடுத்திருக்கிறார் ரஜினி என்பதை உணர்த்தியிருக்கிறார் ஷங்கர். யாரோ ஒருவர் கொடுத்த வீடியோ லிங்கை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதியவர்கள், இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ!
நிஜமாவே ஓடும் ரயில், சரளைக் கற்களுக்கு மத்தியில் நிஜமான தண்டவாளம், சக்கரம் பொருத்தப்பட்ட கால்களுடன் ஓடும் நிஜ ரஜினி.. ஒரு நிமிடம் முதுகுத்தண்டு சிலிர்த்தது. அந்த ஹை வோல்டேஜ் மின்சாராக் கம்பிகளுக்கு மத்தியில், சாதாரண ஸ்டன்ட் கலைஞர்களுக்கு சமமமாய் தானும் ரயில் மீது நின்று சண்டை போட்ட காட்சியும், அந்த பதட்ட நிமிடங்களை தலைவர் விவரித்த விதமும்… சட்டென்று கண்கள் கலங்கி விட்டன. என்னதான் பாதுகாப்புடன் படமாக்கப்பட்டாலும், எந்த இளம் ஹீரோவுக்காவது இந்த தில் இருக்குமா…?
இன்னொரு விஷயத்தையும் இங்கே ஒப்புக் கொள்ள வேண்டும்… முன்பெல்லாம், ‘அவர் இப்படி மேக்கப் போட்டார்… இவர் இப்படி ரிஸ்க் எடுத்தார்,’ என்று செய்திகள் வரும். அப்போது ‘ரஜினியைப் பற்றியும் இப்படி செய்தி வர வேண்டும்’ என்று ஒரு சின்ன ஆசை நிறையப் பேருக்கு இருந்தது உண்மைதான்.
ஆனால் இந்த மேக்கிங் ஆப் எந்திரன் பார்த்த பிறகு, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இந்த எண்ணம்தான் நிச்சயம் தோன்றியிருக்கும்: ‘தலைவா… போதும். ரசிகர்களைத் திருப்திப்படுத்த நீங்கள் எடுத்த ரிஸ்க் எல்லாம் போதும். நீங்கள் சொன்னதுபோல, எழுதறவங்க எழுதிக்கிட்டுதான் இருப்பாங்க. உங்களுக்கு ரிவார்ட் தர ரசிகர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து இந்த ரிஸ்க் இனியும் வேண்டாம்!’
தலைவரை ஆறுமணிநேரம் ஒரு டப்பில் படுக்க வைத்த காட்சியிலும் சரி, அவரைப் போல மாஸ்க் செய்ய அவரை உட்கார வைத்து தலையில் அந்த கெமிக்கல் குழம்பை ஊற்றும்போதும் சரி, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, முகத்தோல் உரிந்தது போன்ற கெட்டப்பில் தலைவரை தரையில் துடிக்க வைத்த காட்சியிலும் சரி…மனம் தவித்தது (விகடன் குழுவினருக்கு ஒரு நான்கு முறையாவது இந்த மேக்கிங் ஆஃப் எந்திரனை போட்டுக் காட்ட வேண்டும்!).
இவ்வளவு அரும்பாடுபட்டும், எந்த பெருமைக்கும் சொந்தம் கொண்டாடவில்லை ரஜினி. ‘ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர், ஐஸ்வர்யா அருமை, கலாநிதி மாறன் பிளானிங் பக்கா, பீட்டர் ஹெயின் சிறப்பா பண்ணார்…,’ இப்படித்தான் வார்த்தைக்கு வார்த்தை ரஜினி சொன்னாரே தவிர, அந்தப் புகழில் தன் பங்கைப் பற்றி துளி கூட அலட்டிக் கொள்ளவில்லை. பெருமையிலும் பெருமை என்றாரே வள்ளுவர்… அந்தப் பெருமைக்கு உதாரணம் ரஜினி என்றால் மிகையல்ல!!
இறுதியில் அந்த ஹாலிவுட் கலைஞர்கள், ஜாக்கி சானின் ஸ்டன்ட் மாஸ்டர் போன்றோர் ரஜினிக்கு சூட்டிய புகழாரம்: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிறவிக் கலைஞர். அவரால் எதையும் செய்ய முடியும். இந்த மாதிரி ஒத்துழைப்பு தந்த நடிகரைப் பார்த்ததே இல்லை. அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது..!” – சிலிர்ப்பாக இருந்தது.
‘நான் செய்யும் எந்த விஷயமும் தமிழருக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும்’ என்று, செய்துவிட்டுத்தான் சொல்லியிருக்கிறார் ரஜினி!
-வினோ