Wednesday, July 13, 2011

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சிறுநீரக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை கோளாறு காரணமாக சென்னை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்திற்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, நிபுணர் குழுவினர் அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு, கடந்த மே மாதம் 27ம் தேதி அழைத்துச் சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று சென்னை திரும்பினார்.

நேற்று இரவு 10.10 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலைய வருகை மையத்தின் வரவேற்பு அறையின் வி.ஐ.பி.,க்கள் தங்கும் இடத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர், அவருக்காக தயாராக இருந்த இன்னோவா காரில், ரஜினிகாந்த் வீட்டிற்கு புறப்பட்டார். வெள்ளை நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்த நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தின் 6ம் எண் கேட் வழியாக, ரஜினி வெளியே வந்தார். ரஜினிகாந்தை வரவேற்க, சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து ரஜினி கையசைத்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.